தஞ்சைப் பிரகதீஸ்வரர் கோயில் வரலாற்றைத் தேடி ஒரு அடி பாரம்பரிய பயணம்

Sep 15, 2026 - 14:01
Sep 15, 2026 - 14:02
தஞ்சைப் பிரகதீஸ்வரர் கோயில்  வரலாற்றைத் தேடி ஒரு அடி பாரம்பரிய பயணம்

தஞ்சைப் பிரகதீஸ்வரர் கோயில் வரலாற்றைத் தேடி ஒரு அடி பாரம்பரிய பயணம்

லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன், லயன்ஸ் கிளப் ஆப் இந்திரா கணேசன் சங்க நிர்வாகிகள் இணைந்து வரலாற்றைத் தேடி ஒரு அடி பாரம்பரிய பயணத்தை லயன்ஸ் சங்க வட்டாரத் தலைவர் சரவணன், லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன் சங்க தலைவர் ஹேமலதா, செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், இந்திரா கணேசன் லயன்ஸ் சங்கத்தலைவர் சித்த மருத்துவர் லதா, இயக்குநர் சித்த மருத்துவர் நான்சி ஆக்னஸ் ஆகியோர் மேற்கொண்டனர். லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன் செயலரும், வரலாற்று ஆர்வலர் குழு தலைவருமான யோகா ஆசிரியர் விஜயகுமார் நெஞ்சை அள்ளும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் கட்டிட சிறப்பு குறித்து பேசுகையில், தஞ்சைப் பிரகதீஸ்வரர் கோயில், முதலாம் இராஜராஜ சோழனால் கி.பி. 1000–1010 காலப்பகுதியில் கட்டப்பட்ட மாபெரும் சோழர் கட்டிடக்கலைச் சின்னமாகும். சோழர் கல்வெட்டுகளில் இக்கோயில் “இராஜராஜேஸ்வரம்”, “தக்க்ஷிண மேரு” என அழைக்கப்பட்டது. 

கோயில் வளாகம் துல்லியமான வடிவமைப்புடன் அமைக்கப்பட்டு, வெளிப்பிரகாரம் சுமார் 241.06 × 121.10 மீட்டர் அளவுடையது. கருவறையின் மையத்தில் பிரமாண்டமான சிவலிங்கம் அமைந்துள்ளது; அதைச் சுற்றி பிரதட்சிணப்பாதை உள்ளது. கருவறைக்கு முன் அர்த்தமண்டபம், மகாமண்டபம், முகமண்டபம் ஆகிய கட்டிடப் பகுதிகள் அமைந்துள்ளன.கோயிலின் மிகச் சிறப்பான அம்சமான ஸ்ரீவிமானம் சுமார் 59.82 மீட்டர் உயரம் கொண்டது.முந்தைய கோயில்களை விடப் பிரம்மாண்டமாக, இதில் 13 தளங்கள் கொண்ட விமானம் அமைக்கப்பட்டுள்ளது. விமானத்தின் தளங்கள் மேலே செல்லச் செல்ல குறுகி, உச்சியில் சிகரம் மற்றும் ஸ்தூபி அமைந்துள்ளன. சிகரம் ஒரே கல்லால் ஆனது என்ற பொதுவான கருத்துக்கு மாறாக, அது பல கற்களை இணைத்து உருவாக்கப்பட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கற்களை உயரத்திற்கு எடுத்துச் செல்ல சாய்வுப்பாதைகள் மற்றும் சாரக்கட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பது முக்கியமான பொறியியல் கருதுகோளாகும்.கேரளாந்தகன் திருவாசல் மற்றும் இராஜராஜன் திருவாசல் ஆகியவை முக்கிய நுழைவாயில்களாகத் திகழ்கின்றன. திருச்சுற்று மாளிகையில் திக்பாலகர்கள், பரிவாரத் தெய்வங்கள் உள்ளிட்ட பல துணைச் சந்நிதிகள் அமைக்கப்பட்டுள்ளன. கல்வெட்டுகள், சோழர் ஓவியங்கள், சிற்பங்கள் ஆகியவை கோயிலின் வரலாற்று மற்றும் கலைச் சிறப்பை எடுத்துரைக்கின்றன. சுமார் 50 கி.மீ. தொலைவிலிருந்து பெருங்கற்கள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்பது கட்டுமானத் திட்டமிடலின் சிறப்பை உணர்த்துகிறது. பிரகதீஸ்வரர் கோயில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சோழர்கள் பெற்றிருந்த கட்டிடக்கலை, கணிதம், பொறியியல் மற்றும் கலைத்திறனின் மாபெரும் சான்றாகும் என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0