சித்தன்னவாசல் சமணர் படுக்கையில் தமிழிக் கல்வெட்டு

Nov 5, 2025 - 08:37
சித்தன்னவாசல் சமணர் படுக்கையில் தமிழிக் கல்வெட்டு

சித்தன்னவாசல் சமணர் படுக்கையில் தமிழிக் கல்வெட்டு

திருச்சிராப்பள்ளி வரலாற்று ஆர்வலர்கள் குழு சார்பில் சித்தன்னவாசல் சம்மர் படுக்கையில் உள்ள தமிழிக் கல்வெட்டு குறித்து அறிய மரபு பயணத்தை திருச்சிராப்பள்ளி வரலாற்று ஆர்வலர்கள் குழு தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார், சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர்கள் பாண்டியன், முகமது சுபேர், சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன், வரலாற்று ஆசிரியர் அரிஸ்டோ வசந்தகுமார் உள்ளிட்டோர் பயணம் மேற்கொண்டனர். சமணர் படுக்கை குறித்து வரலாற்று ஆர்வலர்கள் குழுவினர் கூறுகையில், திருச்சியிலிருந்து 49 கி.மீ தொலைவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் சித்தன்னவாசல் அமைந்திருக்கிறது தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து 9 கல் தொலைவிலுள்ள சித்தன்னவாசல் தமிழக வரலாற்றில் சிறப்பு வாய்ந்தது. சித்தன்னவாசல் மலையில் கிழக்கு முகப்பில் அமைந்திருக்கும் குகையின் பெயர்தான் ஏழடிப்பட்டம். மலையில் மடிப்பு மாதிரியான ஒரு அமைப்பு உடையது. இங்கு சமணத் துறவிகள் வாழ்ந்ததற்கான பல்வேறு அடையாளங்கள் தென்படுகின்றன. ஏழடிப்பட்டம், சமணர் படுக்கை என கூறப்படும் இந்த இடத்திற்கு மலையின் மேற்குப் பகுதியிலிருந்து மலைக்கு மேலே ஏற படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இங்குள்ள படிகளில் ஏறிக் கிழக்குப் பக்கமாக நகர்ந்தால் ஏழடிப்பட்டம் குகை வந்துவிடும். குகைக்குள் நுழைந்த உடனே ஆங்காங்கே பாறைகளில் செதுக்கப்பட்ட படுக்கைகள் நம் கண்ணில் படுகின்றன. குகையின் தரையில் 17 படுக்கைகள் செதுக்கப்பட்டுள்ளன. இவை வழவழப்பாக ஆக்கப்பட்டுள்ளன. படுக்கைகளின் ஒரு பகுதியில் தலையணை பயன்படுத்துவது போன்ற அமைப்புடனும் மேடாக அமைத்துள்ளனர். படுத்துத் தூங்குவதற்கென்றே தனித்தனியாக ஏராளமான படுக்கைகளை ஏற்படுத்தியிருக்கின்றனர். இங்குள்ள சில படுக்கைகளைச் சுற்றிலும் கல்வெட்டுகள் இருக்கின்றன. கி.மு 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழி எழுத்துகளும் இங்கு பொறிக்கப்பட்டுள்ளன. குகை மேலே ஓவியங்கள் சமணர்களால் மூலிகை வண்ணங்களைக் கொண்டு வரையப்பட்டிருப்பது மேலும் நமக்கு ஆச்சர்யத்தைக் கொடுக்கிறது. சமணப் படுக்கை ஒன்றின் பக்கவாட்டில் கல்வெட்டு உள்ளது. இங்கு வேறுபல கல்வெட்டுக்களும் உள்ளன. இது சிறப்பு வாய்ந்ததாகும்.‌ கல்வெட்டில் எருமி நாடு குமுழூர் பிறந்த காவுடி ஈதென்கு சிறு போசில் இளயர் செய்த அதிட்டானம் என்றுள்ளது. இந்தப் படுக்கையானது எருமி நாட்டு இளயரால் செய்யப்பட்டது. எருமி நாட்டின் குமுழூரைச் சேர்ந்த காவுதிக்குச் சிறுபொசிலைச் சேர்ந்த இளயர் படுக்கை அமைத்துக் கொடுத்ததை கல்வெட்டுக் கூறுகிறது. கர்நாடகா மாநிலம் மைசூரிலிருந்து சமண முனிவர் தமிழ் நாட்டுப் புதுக்கோட்டையைச் சேர்ந்த சித்தன்னவாசலில் உள்ள ஏழடிப்பாட்டம் மலைக்கு வந்து குடியமர்ந்துள்ளார். இதுவே கர்நாடக - தமிழகத் தொடர்பாகக் கிடைத்த முதல் கல்வெட்டுச் சான்றாகும். இளயர் என்பவர் தமிழகத்தின் போரின வீரர்களாவர். சமணர் படுக்கைகள், குகை ஓவியங்கள் உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டிருக்கும் சித்தன்னவாசல் தற்போது சுற்றுலாத் தலமாக மாற்றப்பட்டிருக்கிறது.சிறுவர் பூங்கா, தமிழன்னை சிலை, மகாவீரர் சிலைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இங்கு இசை நீரூற்று ஒன்று உருவாக்கப்பட்டது. தற்போது செயல்பாட்டில் இல்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் 10 அடி ஆழம் உள்ள செயற்கைக் குளத்தை உருவாக்கி படகுக் குழாம் அமைக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் சித்தன்னவாசல் திறந்திருக்கிறது. சித்தன்னவாசலுக்குள் உள்ளே செல்வதற்குச் சுற்றுலாத்துறை உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் ரூ.25 வசூலிக்கப்படுகிறது. அதன்பின்பு குகைக்கோயில் ஓவியம், சமணர் படுக்கைகளைக் காண தொல்லியல் துறை சார்பில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0