இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களின் 14வது பட்டமளிப்பு விழா

May 16, 2026 - 19:24
இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களின் 14வது பட்டமளிப்பு விழா

இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களின் 14வது பட்டமளிப்பு விழா

திருச்சிராப்பள்ளி மணிகண்டம் பகுதியில் அமைந்துள்ள இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களின் 14வது பட்டமளிப்பு விழா மிகுந்த சிறப்புடனும், கோலாகலமான சூழலிலும் நடைபெற்றது. கல்வி நிறுவன வளாகம் முழுவதும் விழாக்கோலமாக அலங்கரிக்கப்பட்டு, மாணவர்கள், பெற்றோர்கள், பேராசிரியர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். கல்லூரி மாணவ, மாணவிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பல துறைகளில் பட்டம் பெற்ற மாணவர்கள் கலை மற்றும் அறிவியல் 92 மாணவர்கள், AHS 53 மாணவர்கள், பார்மசி 85 மாணவர்கள், பிசியோதெரபி 36 மாணவர்கள், நர்சிங் 52 மாணவிகள், கல்வியல் கல்லூரி மாணவர்கள் 127, பொறியியல் கல்லூரி 143 மாணவர்கள் மொத்தம் 676 மாணவர்கள் தங்கள் கல்வி சாதனைகளை கொண்டாடும் வகையில் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர். இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகம் (IIIT), திருச்சிராப்பள்ளியின் பதிவாளர் பொறுப்பில் உள்ள டாக்டர் என். ரேணுகாதேவி கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரையாற்றினார். தனது உரையில், “கல்வி என்பது வெறும் பட்டம் பெறுவதற்கான வழி மட்டுமல்ல; அது மனிதனின் வாழ்க்கையை உயர்த்தும் ஒளியாகும். மாணவர்கள் தங்களின் அறிவையும் திறமைகளையும் சமூக நலனுக்காக பயன்படுத்த வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்து வரும் இந்த காலத்தில், புதிய சவால்களை எதிர்கொள்ளும் திறனை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்” என்று அறிவுரைகள் வழங்கினார். மேலும், விடாமுயற்சி, ஒழுக்கம் மற்றும் தன்னம்பிக்கை இருந்தால் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய முடியும் என்றும் அவர் கூறினார். இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களின் செயலாளர் இன்ஜினியர் க.ராஜசேகரன் விழாவை தொடங்கி வைத்தார். அவர் தனது உரையில், “இந்த கல்வி நிறுவனம் மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்கும் ஒரு சிறந்த கல்வி மையமாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. கல்வியுடன் சேர்த்து ஒழுக்கம், மனிதநேயம் மற்றும் சமூக பொறுப்புணர்வையும் மாணவர்களிடம் வளர்க்கும் நோக்கில் பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன” என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து கல்வி நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் க. பாலகிருஷ்ணன் வரவேற்புரை வழங்கி, கடந்த ஆண்டின் கல்விச் சாதனைகள் மற்றும் மாணவர்களின் முன்னேற்றங்களை பற்றிய பட்டமளிப்பு அறிக்கையை வாசித்தார். பல்கலைக்கழகத் தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற உயரிய மதிப்பெண்கள், விளையாட்டு மற்றும் கலாச்சார போட்டிகளில் பெற்ற வெற்றிகள் ஆகியவை பெருமையுடன் குறிப்பிடப்பட்டன. இந்திரா கணேசன் கல்வி குழுமத்தின் பதிவாளர் டாக்டர் எம். அனுசியா மற்றும் இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர் எஸ். கார்த்திகேயன், அனைத்து கல்லூரி முதல்வர்கள், துறைத்தலைவர்கள் மற்றும் கல்வி பேராசிரியர்கள் முன்னிலையில் பட்டமளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0